செய்திகள்
உயிரிழப்பு

கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு- போலீசில் புகார்

Published On 2021-10-12 10:18 GMT   |   Update On 2021-10-12 10:18 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள விழுப்பனூரைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மகள் பிரேமா. இவருக்கும், தேனியைச் சேர்ந்த சுகுமார் என்பவருக்கும் 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஜெயப்பிரியா என்ற மகள் இருந்தார்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேமா அவரை பிரிந்து தந்தை வீட்டில் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு ஜெயப்பிரியா அருகில் உள்ள கோவிலில் கொடுத்த பிரசாதத்தை சாப்பிட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் மறுநாள் காலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் பதறிபோன தாய் மற்றும் உறவினர்கள் சிறுமியை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஜெயப்பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவல் அவரது தந்தை சுகுமாருக்கு தெரிவிக்கப்பட்டது. விழுப்பனூர் வந்த அவர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

அப்போது அவர், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறினார். இந்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News