சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பியவர் கைது
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது37). இவர் குழந்தைகளின் ஆபாச படங்களை தனது மொபைல் மூலம் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை தனது நண்பர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பப்பட்டது. புகாரின் அடிப்படையில் முருகேசன் மீது இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சாவியே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
இதையடுத்து தென்காசி மாவட்ட போலீசார் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பாதுகாப்புச் சட்டத்தின்படி 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவதும், குழந்தைகளை ஆபாசமாக படம் எடுப்பதும், அதை மற்றவர்களுடன் இணையத்தில் பகிர்வதும் பார்ப்பதும் குற்றமாகும்.
போக்சோ சட்டத்தின் விதிகளை பற்றி தெரியாத கிராமப்புறங்களை சேர்ந்த சிலர் இதுபோன்று குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்வது, பார்ப்பது மற்றும் நண்பர்களுடன் பகிர்வதை தவிர்க்குமாறும், மீறுபவர்கள் மீது கடுமையான சட்டப் பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.