செய்திகள்
டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்
டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
சண்டிகர்:
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 59-வது நாளாக டெல்லி எல்லைகளில் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது குளிர் தாங்காமல் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயிகளின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது 76 விவசாயிகள் இறந்துள்ளனர். டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு நாங்கள் அரசு வேலை வழங்குவோம் என அறிவிக்கிறேன்.
இந்த நாட்டில் அரசியலமைப்பு உள்ளதா? வேளாண்மை என்பது அட்டவணை 7 இன் கீழ் ஒரு மாநிலப் பொருளாகும். பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் மத்திய அரசு ஏன் அதை இயற்றியது? அவர்கள் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால் அதை மக்களவையில் நிறைவேற்றி உள்ளனர். மாநிலங்களவையில், விவாதங்கள் நடத்தக்கூடும் என்று அவர்கள் உணர்ந்ததால் அது அவசரமாக நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.