செய்திகள்
திருப்பூரில் சாக்கடை கால்வாய் அடைப்பை சீரமைத்த எம்.எல்.ஏ.,
நல்லாத்துபாளையத்தில் நொய்யல் நதியை தூர்வாரும் பணியை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தொடங்கிவைத்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தாழ்வான நீர் தேங்கும் பகுதிகளில் பாதாள சாக்கடைகள், மழைநீர் தேங்கி பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் சிறப்பு மாஸ் கிளினிக் செய்ய மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் உத்தரவிட்டுள்ளார் .
இந்த பணி நேற்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சி முழுவதும் உள்ள சாக்கடை கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் மத்திய மாவட்டம் வடக்கு மாநகரம் கொங்குநகர் பகுதி, நல்லாத்துபாளையத்தில் நொய்யல் நதியை தூர்வாரும் பணியை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பையும் அவரே சரி செய்தார். மேலும் மாநகராட்சி ஊழியர்கள் அடைப்பை சரிசெய்யும் பணியை ஆய்வு செய்தார்.
அப்போது திருப்பூர் தெற்கு மாநகர தி.மு.க. பொறுப்பாளர் டி.கே.டி. நாகராஜ், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ் குமார், பகுதி செயலாளர்கள் போலார் சம்பத், ஜோதி, வட்ட செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.