உள்ளூர் செய்திகள்
கொலை செய்யப்பட்ட தொழிலாளி

வேலூர் தொழிலாளி கொலை

Published On 2022-01-15 09:36 GMT   |   Update On 2022-01-15 09:36 GMT
ஆற்காடு அருகே வேலூர் தொழிலாளியை அவரது மனைவி, மாமியார் மாமனார் சேர்ந்து அடித்து கொலை செய்தனர்.
ஆற்காடு:-
வேலூர் சாய்நாத புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 38). கேபிள் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வெண்ணிலா (35). இவர்களுக்கு ஜெயகிருஷ்ணன் (13), சுதர்சன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

வெண்ணிலாவிற்கும், ஜெயபாலுவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வெண்ணிலா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது தந்தை வீடான ஆற்காடு அடுத்த காவனூருக்கு  சென்று விட்டார்.

நேற்று இரவு வெண்ணிலாவை அழைத்து வர ஜெயபால் மாமனார் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த மாமனார் மோகன், மாமியார் வளர்மதி ஆகியோரிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 

அப்போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் மோகன் மற்றும் வளர்மதி, வெண்ணிலா ஆகியோர் சேர்ந்து ஜெயபாலை கத்தி மற்றும் கம்புகளால் சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் ஜெயபால் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக வெண்ணிலா மற்றும் வளர்மதி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மோகனை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News