உள்ளூர் செய்திகள்
கோவையில் மது அருந்தி விட்டு அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்
பொதுமக்கள் சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
கவுண்டம்பாளையம், மே.5-
கோவை காந்திபுரத்தில் இருந்து துடியலூர் நோக்கி அரசு பஸ்சை ஓட்டுநர் ரகு என்பவர் ஓட்டி வந்தார்.
பஸ் புறப்பட்டது முதல் தாறுமாறாக ஓடியபடி சென்றது. ஜி.என்.மில்ஸ் பகுதியில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த காரின் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்தவர்கள் மற்றும் கரில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதையடுத்து காரில் இருந்தவர்கள் மற்றும் பஸ்சில் இந்தவர்கள் டிரைவர் ரகுவை கீழே இறங்க வைத்து பார்த்த போது அவர் மது அருந்திவிட்டு பஸ்சை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.
போதையில் இருந்த டிரைவர் ரகு காரில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்து கொடுக்கிறேன், 2 நாள் அவகாசம் கொடுங்கள், வழக்கு போட வேண்டாம் என்று கெஞ்சினார்.
ஆனால் போதையில் இருந்த டிரைவர் ரகுவை தொடர்ந்து பஸ்சை இயக்கவிடாமல் அங்கிருந்த பொதுமக்கள் துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த துடியலூர் போலீசாரிடம் ரகுவை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து அரசு பஸ்சை பறிமுதல் செய்துடிரைவர் ரகுவை போலீஸ் நிலையம் அழைத்து வந்த போலீசார் அவருக்கு மது அருந்தியுள்ளாரா என பரிசோதனை செய்தனர். இதில் மது அருந்திருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு பேருந்தில் பயணிகள் இருந்த நேரத்தில் டிரைவர் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது