செய்திகள்
ஈரோட்டில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
ஈரோட்டில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவனிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு:
உழவன் மகன் விவசாயிகள் சங்க செயலாளர் சி.மணிகண்டன் தலைமையில் விவசாயிகள் ஈரோடு கலெக்டர் முகாம் அலுவலகத்தில் கலெக்டர் சி.கதிரவனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
ஈரோடு அணைநாசுவம்பாளையம், எஸ்.பி.அக்ரஹாரம், பி.பி.அக்ரஹாரம், நஞ்சை தளவாய்பாளையம், வைராபாளையம், சூரியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 450 ஹெக்டேர் பரப்பளவுக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. அங்கு நெல் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்கிறார்கள். எனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அங்கு நெல் களம், நெல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில் பகுதியை சேர்ந்த முருகேஷ் மற்றும் குடும்பத்தினர் கொடுத்த மனுவில், “எனது மகன் மோகன்பாபு (வயது 20) குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக மோகன்பாபு கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இதனால் சித்தோட்டில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு வேலைக்கு சென்றார். அவர்கள் ரேஷன் அரிசியை கடத்துவதாக தெரியவந்து உள்ளது. எனவே மோகன்பாபுவை எங்களுடன் வருமாறு அழைத்தோம். ஆனால் அவர் வரமறுத்துவிட்டார். தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. எனவே, அரிசி கடத்தும் கும்பலிடம் இருந்து எனது மகனை மீட்டு தர வேண்டும். மேலும், அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறிஇருந்தனர்.