செய்திகள்
கொலை

பொள்ளாச்சி அருகே மாமியாரின் கள்ளக்காதலை கண்டித்த மருமகன் குத்திக்கொலை

Published On 2021-02-19 06:56 GMT   |   Update On 2021-02-19 06:56 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மாமியாரின் கள்ளக்காதலை கண்டித்த மருமகனை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிப்பாளையத்தை அடுத்த மாப்பிள்ளை கவுண்டர்புதூரைச் சேர்ந்தவர் தண்டபாணி (வயது 61). கூலித்தொழிலாளி இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

அதன்பிறகு தண்டபாணிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான ராணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் கள்ளக்காதலர்கள் ஆனார்கள்.

ராணிக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. தண்டபாணி அடிக்கடி ராணி வீட்டுக்கு வந்து செல்வது அவரது மகள்களுக்கு பிடிக்கவில்லை. தங்கள் தாயாருடனான கள்ளக்காதலை கைவிடும் படி தண்டபாணியை அவர்கள் கண்டித்து வந்தனர்.

ராணியின் மகள்களில் ஒருவரான மலர்க்கொடி (29) என்பவர் தனது கணவர் துரையன் (55) என்பவருடன் பொள்ளாச்சி கோலார்பட்டியில் வசித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு மலர்க்கொடியும், துரையனும் ராணி வீட்டுக்கு வந்து தங்கியிருந்தனர்.

நேற்று ராணியை தேடி அவரது கள்ளக்காதலனான தண்டபாணி வந்தார். அவரை பார்த்ததும் மலர்க்கொடியும், துரையனும் ஆத்திரம் கொண்டனர். இங்கு ஏன் வந்தாய் என கேட்டு அவர்கள் தண்டபாணியுடன் தகராறு செய்தனர்.

கள்ளக்காதலை கைவிடும்படி கூறி தகராறு செய்ததால் தண்டபாணி ஆத்திரம் கொண்டார். வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவர் துரையனை குத்தினார். அதை தடுக்க வந்த மலர்க்கொடிக்கும் கத்திக்குத்து விழுந்தது.

ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த கணவன்-மனைவி 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரையன் பலியானார். காயம் அடைந்த அவரது மனைவி மலர்க்கொடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டபாணியை கைது செய்தனர். இந்த சம்பவம் வடக்கிப்பாளையம் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News