செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தமிழக காவல்துறையே முக்கிய காரணம் - முதலமைச்சர் பழனிசாமி

Published On 2021-01-14 21:08 GMT   |   Update On 2021-01-14 21:08 GMT
தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தமிழக காவல்துறையே முக்கிய காரணம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
சென்னை:

சென்னை மாநகர காவல்துறையின் சார்பில் பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகயை கொண்டாடினார்.

விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

தமிழகத்தில் அமைதி வளம் வளர்ச்சி என்ற அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறந்த ஆட்சியை வழங்கினார். அவரது வழியில் செயல்படும் தற்போதைய தமிழக அரசு மத்தியில் பல்வேறு துறைகளுக்கான விருதுகளை பெற்று வெற்றி நடை போடுகிறது.

இந்த வெற்றி நடைக்கு தமிழகத்துக்கு அச்சாணியாக இருந்து தமிழக காவல்துறையும் வீரநடை போடுகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தமிழக காவல்துறையே முக்கிய காரணம். காவல்துறையினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுகின்றனர். எனவே தான் காவல்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

காவல்துறையின் பணிகள் சிறக்க நான்காவது போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய சவால்களை எதிர்கொள்ள காவல்துறை நவீனப்படுத்தப்பட்டு உள்ளது. காவல் துறையில் காலி பணியிடங்கள் குறைக்கப்பட்டு பணிநியமனங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல நமக்கெல்லாம் பொங்கல் நன்னாளில் நல்ல வழி பிறக்கும்.

இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
Tags:    

Similar News