செய்திகள்
நாகை அருகே வாக்குச்சாவடி மையத்துக்குள் நுழைந்த நபர் - வாக்குப்பெட்டியை தூக்கி செல்ல முயன்றாரா?
நாகை அருகே வாக்குச்சாவடி மையத்துக்குள் நுழைந்த நபர் வாக்குப்பெட்டியை தூக்கி செல்ல முயன்றாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் 3 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 8 வார்டு உறுப்பினர்கள் என 11 காலி இடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் அந்தனப்பேட்டை 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவு அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. அப்போது திடீரென வாக்குச்சாவடி மையத்துக்குள் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் நுழைந்தார். அவரிடம் ஓட்டு போடுவதற்கான ஆவணங்கள் இல்லை. அவரிடம் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் கேட்ட போது அவர்,
நேர்மையாக வாக்குப்பதிவு நடக்கிறதா? என கண்காணிக்க வந்ததாக கூறி திடீரென வாக்கு பெட்டியை தூக்க முயன்றதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் போலீசார் அவரை மையத்தை விட்டு வெளியே செல்லும்படி கூறினார். அப்போது அவர் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் 3-வது வார்டு பகுதியை சேர்ந்த நடராஜன் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்தனப்பேட்டை வாக்குப்பதிவு மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.