ஆட்டோமொபைல்
இந்தியாவில் ஏத்தர் 450 விற்பனை நிறுத்தம்
இந்திய சந்தையில் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனையை பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களில் நிறுத்திவிட்டது. இந்த மாடல் விற்பனை நவம்பர் 28 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டது.
ஏத்தர் 450 மாடல் அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டர் 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏத்தர் எனர்ஜி அறிமுகம் செய்த ஏத்தர் 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் போன்ற மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்திய சந்தையில் இரண்டு புதிய ஏத்தர் ஸ்கூட்டர்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால், பழைய ஏத்தர் 450 விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் அறிமுகமான முதல் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையை ஏத்தர் 450 பெற்று இருந்தது. இதன் பின் அறிமுகமான ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் ஏத்தர் 450 பிளஸ் உள்ளிட்டவை முந்தைய மாடலுக்கான பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கின்றன.