ஆன்மிகம்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

Published On 2021-02-26 07:08 GMT   |   Update On 2021-02-26 07:08 GMT
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 5 கோபுரம், 5 நந்தி, 5 கொடிமரங்கள், 5 தீர்த்தங்கள், 5 பிரகாரம் என அனைத்தும் 5-ஆக அமையப்பெற்றுள்ளது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு கிராம தேவதைகளுக்கும் உற்சவம் நடைபெறும்.

அந்த வகையில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி கோவிலில் தேர் முகூர்த்தமும், ஜனவரி 25-ந்தேதி அய்யனாருக்கு காப்புகட்டுதலும், 26-ந்தேதி செல்லியம்மனுக்கு காப்பு கட்டுதலும் நடைபெற்று, 2-ந் தேதி பால்குடம் எடுத்தல் மற்றும் செடல் உற்சவம், தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆழத்து விநாயகருக்கு நடந்த திருவிழாவில் கடந்த 14-ந்தேதி தேர் திருவிழாவும், 15-ந்தேதி தேரோட்டமும் நடைபெற்றது.

இதையடுத்து கடந்த 17-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், காலை மற்றும் மாலை நேரங்களில் விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்றது. கடந்த 22-ந்தேதி கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு பழமலைநாதர் காட்சி அளிக்கும் ஐதீக திருவிழா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு ஆழத்து விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் ஏற்கனவே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த 5 தேர்களிலும், பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். முதலில் ஆழத்து விநாயகர் தேர், சரியாக காலை 5.45 மணிக்கு புறப்பட்டது. அப்போது சிவாச்சாரியர்கள் சிவ மந்திரங்களை ஓத, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த தேரானது சன்னதி வீதி, தென் கோட்டை வீதி, மேற்கு கோட்டை வீதி, வடகோட்டை வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் எழுந்தருளிய தேரானது காலை 6.30 மணிக்கு புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து விருத்தகிரீஸ்வரர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது. அப்போது சிவாச்சாரியர்கள் சிவ மந்திரங்களை ஓத, மேளதாளங்கள் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த தேர் நான்கு வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.

இதைத்தொடர்ந்து விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக சென்று, மீண்டும் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தேரோட்டத்தில் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மாசிமக உற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் பஞ்சமூர்த்திகளுக்கு மணிமுக்தாற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

நாளை(சனிக்கிழமை) புஷ்ப பல்லக்கில் சுப்பிரமணியருக்கு தெப்ப உற்சவமும், 28-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், வருகிற 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News