ஆன்மிகம்
சாய் பாபா

சாய்பாபா அருளை பெற்றுத்தரும் கூட்டு பிரார்த்தனை

Published On 2019-06-29 09:46 GMT   |   Update On 2019-06-29 09:46 GMT
ஒருவர் தனக்கு ஆனந்தமாக வாழ எவை எவை வேண்டுமோ அத்தனையும் மற்றவர்களும் பெற வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த கூட்டுப் பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.
சீரடியில் சாய்பாபா வாழ்ந்த காலத்தில் மாதவராவ் தேஷ்பாண்டே என்று ஒரு பக்தர் இருந்தார். பாபா மீது மிகுந்த பற்று கொண்ட பக்தர்களில் இவரும் ஒருவர். பாபாவின் அருள் பார்வை பட்டாலே போதும் எல்லா தோஷங்களும் முழுமையாக விலகி ஓடி விடும் என்ற நம்பிக்கையை இவர் கொண்டிருந்தார்.

இவரது அபரிதமான நம்பிக்கை மற்றும் பொறுமையை கண்டு சாய்பாபாவும் அவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். எத்தனையோ பக்தர்கள் சீரடி தலத்துக்கு வந்து தன்னை சந்தித்து ஆசி பெற்ற போதிலும் மாதவ்ராவ் தேஷ்பாண்டே மீது பாபா வைத்திருந்த பாசத்துக்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.

அதாவது மாதவராவ் தேஷ்பாண்டே தனக்கு மட்டுமே சாய்பாபாவிடம் கேட்டு பிரார்த்தனை செய்பவர் அல்ல. அவர் தனக்கு தெரிந்த எல்லோருக்குமே சாய்பாபாவிடம் மன்றாடி கேட்டு பிரார்த்தனை செய்வது உண்டு. மற்றவர்களுக்காக கைகூப்பி தொழுது மனம்உருக வேண்டுவது என்பது எல்லோராலும் செய்ய முடியாத வழிபாடாகும்.

லவுகீக வாழ்க்கையில் மூழ்கும் ஒவ்வொருவரும் இறைவனிடம் வேண்டும் போது தனக்கு அதுவேண்டும் இதுவேண்டும் என்றே கேட்பதுண்டு. சாய்பாபாவை நாடி வந்தவர்களும் 99 சதவீதம் பேர் அப்படித்தான் இருந்தனர். மாதவராவ் தேஷ்பாண்டே மட்டும்தான் விதிவிலக்கு. இதனால் மாதவராவ் தேஷ்பாண்டே மற்றவர்களுக்காக மனம் உருகி கேட்பதை சாய்பாபா நிறைவேற்றினார்.

அந்த வகையில் மாதவராவ் தேஷ்பாண்டேயின் பிரார்த்தனைக்கு தனி ஆற்றலும், சக்தியும் இருந்தது. அதே போன்ற ஆற்றலையும், சக்தியையும் இன்று சென்னை தி.நகர் சரோஜினி தெருவில் இருக்கும் ஸ்ரீ சீரடி சாய்பாபா தியான மற்றும் பிரார்த்தனை மையம் பெற்றுள்ளது. இந்த மையத்தில் துன்பப்படுபவர்களின் துயர் துடைக்க சாய்பாபா அருளி செய்த வழிபாட்டு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.



சாய்பாபா வழியில் அன்பை பரப்புதல், அன்னதானம், உடை தானம் மட்டுமின்றி ஞான தானமும் வழங்குதல், சாய் சம்பந்தப்பட்ட புத்தகங்களை வினியோகித்தல், ஏழை குழந்தைகளின் படிப்புக்கு உதவுதல், நோயாளிகளுக்கு பொருள் உதவி செய்தல் என்று இந்த தியான மையத்தில் பல்வேறு செயல்பாடுகள் குறைவின்றி நடந்து வருகின்றன.

காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும் இந்த மையத்தில் நடைபெறும் பணிகளில் கூட்டுப் பிரார்த்தனை மிக மிக பிரதானமானது, முக்கியமானது.

காலை 8.40 மணி, மதியம் 11.25 மணி, இரவு 7.35 மணி மற்றும் 8.40 மணி ஆகிய நான்கு தடவை இந்த மையத்தில் கூட்டு பிரார்த்தனை செய்யப்படுகிறது. இந்த கூட்டுப்பிரார்த்தனையின் போது உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்படுகிறது. பிறகு தனி நபர்களின் பிரச்சினைகள், தேவைகளுக்காக பிரார்த்தனை செய்யப்படுகிறது.

ஒருவர் தனக்கு ஆனந்தமாக வாழ எவை எவை வேண்டுமோ அத்தனையும் மற்றவர்களும் பெற வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த கூட்டுப் பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சாய்நாதரின் சிந்தனையின் அடிப்படையில் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்படுகிறது. இந்த பிரார்த்தனை செய்பவர்கள் பாக்கியசாலிகள்.

மற்றவர்களுடைய பிரச்சினைகளை சாய்பாபாவின் காலடியில் சமர்ப்பித்து அவரிடம் கைகூப்பி கண்ணீர் மல்க மனம் உருகி பிரார்த்தனை செய்யப்படுகிறது. இந்த பிரார்த்தனைகளுக்கு சாய்பாபா செவிசாய்த்து தினம் தினம் அற்புதங்களை மேற்கொள்கிறார். இந்த கூட்டுப் பிரார்த்தனையை “ஆத்மநிவேதனம்” என்று சொல்லலாம். சாய்நாதருக்கு ஒருவர் படைக்கும் பிரசாதங்களில் இந்த “ஆத்மநிவேதனம்” பிரசாதம் தான் மிக அற்புதமானது. மிகவும் உயர்ந்தது.

யார் ஒருவர் சாய்பாபாவை முழுமையாக உணர்ந்து இருக்கிறார்களோ அவர்களால் மட்டுமே இந்த கூட்டுப் பிரார்த்தனையை மேற்கொள்ள முடியும். இந்த பிரார்த்தனையை செய்பவர்கள் சீரடி சாய்பாபாவின் மனதிலே குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகத்துவமான இந்த பணியைதான் சீரடி சாய்பாபா அறக்கட்டளையை நடத்தி வரும் பேராசிரியர் திருவள்ளுவன் சீரடி சாய்பாபா பிரார்த்தனை மையம் மூலம் செய்து வருகிறார்.

ஆனால் அவர் இதை விளம்பரப்படுத்திக் கொள்வது இல்லை. இந்த பிரார்த்தனை மையம் பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

2003-ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டு, கடந்த 16 வருடங்களாக நடத்தப்படுகிறது.

1. இது ஒரு பிரார்த்தனை தலம்.

2. இந்த தலத்தை தலைமை ஏற்று நடத்தி வருபவர் சாட்சாத் ஸ்ரீசாய் பகவானே. நாங்களெல்லாம் அவரது எளிய பணியாளர்களே.

3. இங்கு தினமும் உலக நன்மைக்காகவும், பாரத திருநாட்டின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் செழிப்பிற்கும், சாயி அன்பர்களின் நலம் வேண்டியும் 4 வேளைகள் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது.

4. இங்கு சாயியிடம் எல்லா அன்பர்களுக்காகவும் மனநலம், உடல் நலம், செல்வ நலம், ஆத்மபலம், கிரக நலம், வேண்டி பிரார்த்தனை செய்யப்படுகிறது.

5. இங்கே சாயிக்கும், அவரது குருவிற்கும், ஆதி குருவிற்கும் நித்ய பூஜை செய்யப்படுகிறது.

6. பாபாவால் ஸ்ரீ ஆஞ்ச நேயர் சுவாமி செப்புகாசு ஷாமாவிற்கு கொடுக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட அந்த காசின் படிமத்திற்கு இங்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது.

7. அவரவர்களின் கர்மவினைகளை சுட்டுப் பொசுக்கும் துனி பூஜையில் ஆத்ம ஆகுதி தினமும் செய்யப்பட்டு அடியார்கள் பலன் பெறுகிறார்கள்.

8. பெருமளவில் அன்னதானமும், நித்தமும் 4 வேளை பிரசாதமும் இங்கு அடியார்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

9. குரு சரித்ரம், குருகீதை, ராமவிஜயம், சாயிராமாயணம், ஸ்தவன மஞ்சரி மற்றும் சாயியால், அடியார்கள் பாராயணம் செய்ய பரிந்துரை செய்யப்பட்ட புத்தகங்களை பாராயணம் செய்து ஆன்மீகத் தெளிவு பெற இங்கே வசதி செய்யப்பட்டிருக்கிறது.

10. பேரிடர் காலங்களில், துன்பப்படும் மனிதர்களுக்கு தேவையான மெழுகுவர்த்தி போர்வை, தண்ணீர் பாட்டில், பிரட், பிஸ்கட், கொசுவர்த்தி சுருள், மருந்துப் பொருட்கள் மற்றும் பிற பொருள்களை லட்சக்கணக்கான ரூபாய் அளவில் உடனடியாக விரைந்து அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு சேவை செய்திருக்கிறது.
 
11. ஒவ்வொரு கோடையிலும், தாகம் தணிக்க, நீர்மோர் பந்தல் அமைத்து இலவச வினியோகம் செய்யப்படுகிறது.

12. ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கு செல்லும் குழந்தைகளுக்கு, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஹயக்ரீவர் பூஜைகள் செய்யப்பட்டு இலவசமாக, சாயி போட்டோ, பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், சாயியின் உதி, டாலர், ரட்சைக் கயிறுகள் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு இலவச விநியோகம் செய்யப்படுகிறது. சரஸ்வதிக்கும் - ஹயக்ரீவருக்கும் நம் குழந்தைகளுக்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது.

13. தீபாவளித் திருநாளில் ஸ்ரீ சாயிபாபாவின் சந்நிதானத்தில் நடக்கும் லட்சுமி பூஜையில் நம் பிரார்த்தனை மையம் சார்பில் நாணயங்களை வைத்து பூஜை செய்யப்படும். பாபாவால் சுட்டிக் காட்டப்படும் அடியார்களுக்கு அந்த காசுகள் இலவசமாக விநியோகம் செய்யப்படும்.

14. ஆடிப்பூரத்தின் போதும், ஒவ்வொரு பவுர்ணமி பூஜையின் போதும், திருமணம், தாய்மை பேறு கிடைத்திட பூஜை செய்யப்படுகிறது. ஏராளமானோர் இதனால் பலன் அடைந்துள்ளார்கள்.

15. இதுவரை லட்சக்கணக்கான அன்பர்களுக்காக கூட்டுப்பிரார்த்தனை செய்யப்பட்டு அவர்களில் ஏராளமானோர் பலன் அடைந்து இருக்கிறார்கள்.

16. நாய், பூனை, மாடு போன்ற மற்ற உயிரினங்களுக்கும் உணவு, குடிநீர் கிடைத்திட இந்த மன்றம் உதவி செய்து கொண்டு இருக்கிறது.

இந்த பிரார்த்தனை தலத்தில் எந்தவித பூஜைகளுக்கும் கட்டணம் இதுவரை விதிக்கப்பட்டதில்லை.

இந்த சந்நிதானத்தில், வரும் அன்பர்களுக்கு சங்கல்ப தாள்கள் கொடுக்கப்படும். சாயியிடம் பிரார்த்தனை செய்து விட்டு தங்கள் வேண்டுதல்களை அதில் எழுதி 108 தடவை ‘ஸ்ரீ சாயி’ என எழுதி இங்கே சாயியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த பிரார்த்தனைகள் நிறைவேற உடனுக்குடன் அவைகளை ஸ்ரீ சாயியிடம் சேர்க்க கூட்டுப் பிரார்த்தனை தினமும் 4 வேளைகளும் செய்யப்படுகிறது. உங்களது பிரார்த்தனைகள் நிறைவேற, கூட்டுப் பிரார்த்தனைகள் செய்யப்பட வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டிய தொலைபேசி எண். 86756 05786.

அல்லது தபாலில் எழுதி அனுப்ப

ஸ்ரீசாயி பிரார்த்தனை மையம், எண். 6, சரோஜினி தெரு, தி.நகர், சென்னை-17 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இவ்வாறு பேராசிரியர் திருவள்ளுவன் கூறினார்.

பிரார்த்தனை மையத்தில் செய்யப்படும் பிரார்த்தனைகள் தொடர்பாக மேலும் கூடுதல் தகவல்களை அவரிடம் 9444453777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.
 
Tags:    

Similar News