செய்திகள்
வேளாங்கண்ணி அருகே பாம்பு கடித்து பெண் பலி
வேளாங்கண்ணி அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
கீழ்வேளூர் தாலுகா மேல ஒதியத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி ராதிகா (வயது24). இவர் சில நாட்களுக்கு முன்பு கருங்கண்ணியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டை ராதிகா சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவரில் வெடிப்பு இருந்துள்ளது. அந்த வெடிப்பில் அவர் கை வைத்த போது அதில் மறைந்திருந்த பாம்பு ஒன்று ராதிகாவை கடித்தது. இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராதிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராதிகாவுக்கு கடந்த ஆண்டு தான் திருமணமானது குறிப்பிடத்தக்கது.