ஆன்மிகம்
சபரிமலை

சபரிமலை கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்கு ஆன்லைன் முன்பதிவு முடிந்தது

Published On 2021-11-08 09:04 GMT   |   Update On 2021-11-08 09:04 GMT
இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் சாமிதரிசனம் செய்ய தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மகரவிளக்கு பூஜை தினத்தில் மட்டும் 30ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் கடந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய தினமும் மிகக்குறைந்த பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு, கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன. அந்த கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக வந்த மாதாந்திர பூஜை நாட்களிலும் கடைபிடிக்கப்பட்டன.

அதேவேளையில் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்தது. மேலும் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளில் தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக வருகிற 15-ந்தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள் (16-ந்தேதி) அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் சாமிதரிசனம் செய்ய தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மகரவிளக்கு பூஜை தினத்தில் மட்டும் 30ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சாமி தரிசனத்துக்கு தற்போது நடைமுறையில் உள்ள ஆன்லைன் முன்பதிவு முறை கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. இதையடுத்து பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்துவிட்டது. மேலும் புத்தாண்டு தரிசனத்துக்கான முன்பதிவு நிறைவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய 12 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் முன்பதிவு செய்துள்ள நாட்களில், குறிப்பிட்டுள்ள நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பக்தர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை ‘நெகட்டிவ்’ சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டுவரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த விதிகளை பக்தர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்தவர்கள் வராமல் இருக்கும் நாட்களில், சபரிமலை சென்று உடனடியாக முன் பதிவு செய்தும் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் உடனடி முன் பதிவுக்கு பாஸ்போர்ட் நகல் மட்டும் கொடுத்தால் போதும். மற்றவர்கள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் கொடுக்க வேண்டும். பக்தர்கள் வருகை அதிகரித்தால் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போட்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News