செய்திகள்
டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு
கடும் கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, டெல்லியில் கொரோனா பரவல் குறைந்துள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவருகிறது. கடும் கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
எனினும், தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக உள்ளது. எனவே ஊரடங்கு கட்டுப்படுகளை நீட்டிக்க அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், டெல்லியில் கொரோனா நிலவரம் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பேசினார். அப்போது, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பதாக அறிவித்தார். அடுத்த வாரம் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அவர் கூறினார்.
டெல்லியில் நேற்று 5430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தினசரி தொற்று குறைந்தாலும், உயிரிழப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. நேற்று ஒரே நாளில் 337 பேர் உயிரிழந்தனர். 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.