செய்திகள்
கடற்படை முன்னாள் அதிகாரியை தாக்கும் காட்சி

முன்னாள் கடற்படை அதிகாரி மீது தாக்குதல்: கைது செய்யப்பட்ட சிவசேனா நிர்வாகிகளுக்கு ஜாமீன்

Published On 2020-09-12 09:09 GMT   |   Update On 2020-09-12 09:09 GMT
முன்னாள் கடற்படை அதிகாரி மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசேனா கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 6 பேருக்கும் மும்பை காவல்துறை ஜாமீன் வழங்கி உள்ளது.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மதன் சர்மா என்பவரின் வீட்டுக்குள் புகுந்த சில ரவுடிகள் அவரை இழுத்து சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை விமர்சித்து சமூக ஊடகத்தில் வெளியான பதிவை வாட்ஸ்அப்பில் பகிர்ந்ததற்காக சிவசேனா கட்சி நிர்வாகிகள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சிவசேனாவைச் சேர்ந்த தொண்டர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் முக்கிய நிர்வாகியான கமலேஷ், சஞ்சய் மஞ்ரே ஆகியோரும் அடங்குவர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மராட்டிய  முன்னாள் முதல்வர் தேவேந்திர கூறும் போது, ‘மிகவும் சோகமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம். ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி குண்டர்களால் தாக்கப்பட்டு உள்ளார். தயவுசெய்து குண்டர்கள் செயலை  உத்தவ் தாக்கரே ஜி நிறுத்த சொல்லுங்கள். இந்த குண்டர்களுக்கு கடுமையான நடவடிக்கை மற்றும் தண்டனை வழங்க வேண்டும்’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News