செய்திகள்
பிரதமர் மோடி

ஜல் ஜீவன் திட்டத்தால் தூய்மையான குடிநீர் பெற்ற 2.6 கோடி குடும்பங்கள் -மோடி பெருமிதம்

Published On 2020-11-22 09:56 GMT   |   Update On 2020-11-22 10:00 GMT
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஓராண்டில் 2.6 கோடி குடும்பங்கள் குழாய் வழியே தூய்மையான குடிநீர் பெற்றுள்ளனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் குடிநீர் வினியோக திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடந்தது.  இதனை பிரதமர் மோடி காணொளி காட்சி வழியே இன்று தொடங்கி வைத்து உள்ளார்.  இதன்படி இரு மாவட்டங்களின் 23 கிராமப்புற குழாய் குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார்.

இதன்பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:- 

நாடு விடுதலை அடைந்த பின்பு பல தசாப்தங்களாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பகுதி ஒன்று உண்டெனில், அது இந்த பகுதியே ஆகும். அதிகளவு வளங்களை கொண்ட பகுதியாக இருந்தபோதிலும், விந்தியாசலம் மற்றும் பண்டல்காண்ட் பகுதிகள் பற்றாக்குறை வசதிகளை கொண்ட பகுதியாகவே இருந்து வந்துள்ளன.

இந்த பகுதியில் பல்வேறு ஆறுகள் ஓடியபோதிலும், வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாகவே அறியப்பட்டு வந்துள்ளன.  இதனால் இந்த பகுதியில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். 

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஓராண்டில் 2.6 கோடி குடும்பங்கள் குழாய் வழியாக தூய்மையான குடிநீர் பெற்றுள்ளனர். இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் அதை மேலும் விரைவுபடுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News