வழிபாடு
நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்தில் பந்தக்காட்சியில் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் வீதி உலா வந்த காட்சி.

ஸ்ரீரங்கம் கோவில் தெப்பத்திருவிழா நிறைவு: பந்தக்காட்சியுடன் நம்பெருமாள் வீதி உலா

Published On 2022-02-14 08:17 GMT   |   Update On 2022-02-14 08:17 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் பந்தக்காட்சியுடன் வீதி உலா வந்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. விழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2-ம் நாள் அனுமந்த வாகனத்திலும், 3-ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4-ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5-ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6-ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்பத்திருவிழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் 8-ம் நாளான நேற்று முன்தினம் மாலை மேலவாசலில் உள்ள தெப்பகுளத்தில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

9-ம் திருநாளான நேற்று பந்தக்காட்சி நடைபெற்றது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு காலை 8 மணிக்கு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் வந்தடைந்தார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பந்த காட்சியில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார். பந்தக்காட்சியின் போது நம்பெருமாள் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் வீதி உலா வந்தார். பின்னர் படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவுபெற்றது.

Tags:    

Similar News