வழிபாடு
சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளியதையும், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் காணலாம்.

திருச்செந்தூர் கோவிலில் சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா

Published On 2022-02-14 03:51 GMT   |   Update On 2022-02-14 03:51 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழாவில் சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நடந்து வருகிறது. 7-ம் திருநாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், உருகு சட்டசேவையும் நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு, அம்பாள்களுக்கும் தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

காலை 8.40 மணிக்கு சுவாமி அம்பாள்களுடன் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் மாலை 3.55 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சுவாமி பின்புறம் சிவஅம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுத்தார். சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி இருந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் 8 வீதிகளிலும் உலா வந்தார்.

7-ம் திருநாளை முன்னிட்டு நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றம் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News