செய்திகள்
மழை

கோவையில் 10 ஆண்டுகளுக்கு பின் சராசரி மழை அளவைவிட கூடுதலாக 185 மி.மீ மழை

Published On 2020-01-07 06:31 GMT   |   Update On 2020-01-07 06:31 GMT
கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை 859.5 மி.மீ மழை பதிவாகி இருந்தது. இது 10 ஆண்டுகளுக்கு பின் சராசரி மழை அளவைவிட கூடுதலாக 185 மி.மீ மழை பெய்துள்ளது.
கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் குளிர்காலத்தில் மழை பெய்யவில்லை. பின்னர், கோடை காலத்தில் 8 நாட்களில் 101.4 மி.மீ மழை கிடைத்தது. தென்மேற்கு பருவமழை காலத்தில் 19 நாளில் 308.1 மி.மீ மழை பதிவானது.

மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 16-ந் தேதி தொடங்கி டிசம்பர் 31-ந் தேதி முடிந்தது.

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் கனமழை பெய்தது. குறிப்பாக, மேற்குதொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் தொடர் கனமழை பெய்தது.

மழை காரணமாக சிறுவாணி, பில்லூர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. மேலும், பல வருடங்களுக்கு பின் நொய்யல் ஆற்றில் தொடர்ந்து 3 மாதங்கள் தண்ணீர் சென்றது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வழிந்தது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது.

வடகிழக்கு பருவமழை காரணமாக 27 நாட்களில் மொத்தம் 450 மி.மீ மழை பதிவாகி இருந்தது. இது சராசரி மழை அளவை விட கூடுதல் அளவு ஆகும்.

கோவை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகள் மழை அளவு கணக்கீட்டின்படி, ஆண்டின் சராசரி மழையளவு 674 மி.மீ.

இந்நிலையில், நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை 859.5 மி.மீ மழை பதிவாகி இருந்தது. இது 10 ஆண்டுகளுக்கு பின் சராசரி மழை அளவை விட கூடுதலாக 185 மி.மீ மழை பெய்துள்ளது.

இது குறித்து வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ராமநாதன் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் ஆண்டின் சராசரி மழையை விட கூடுதல் மழை பெய்துள்ளது. அதன்படி, 2019ம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை 859.5மி.மீ மழை பதிவாகியுள்ளது. பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகளவில் பெய்துள்ளது. பல வருடங்களுக்கு பின் இது போன்ற காலநிலை அமைந்து அதிகளவிலான மழை பெய்துள்ளது” என்றார்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 618.2 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஆனால் 2019-ம் ஆண்டு 586.17 மி.மீட்டர் மழை பெய்து இருந்தது. இது 2018-ம் ஆண்டை ஒப்பிடும்போது 32.03 மி.மீட்டர் குறைவு.

Tags:    

Similar News