செய்திகள்
விநாயகர் சிலை கரைக்கும் போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு 6 பேர் பலி: குஜராத்தில் பரிதாபம்
குஜராத் மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைத்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அகமதாபாத்:
குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள ஹடோல் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், நேற்று மாலையில் கிராமத்தினர் இணைந்து அந்த விநாயகர் சிலையை அருகில் உள்ள வட்ரக் ஆற்றில் கரைக்க கொண்டு சென்றனர். சிலையை கரைத்த பின்னர் அனைவரும் ஆற்றில் குளித்தனர்.
அப்போது, ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்த 6 பேர் திடீரென தண்ணீரின் அடித்துச்செல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரின் உடல்களையும் இன்று கைப்பற்றியுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.