ஆன்மிகம்
திருவையாறு காவிரி புஷ்யமண்டப படித்துறையில் புனித நீராட திரண்டிருந்தவர்களை படத்தில் காணலாம்.

திருவையாறு காவிரி ஆற்றில் ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரி

Published On 2021-11-17 04:50 GMT   |   Update On 2021-11-17 04:50 GMT
துலாம் மாதம் முழுவதும் நீராட முடியாவிட்டாலும், முதல்நாள் மற்றும் கடைசி நாள் நீராடினாலே புண்ணியப்பேறு அடைவார்கள் என்பது ஐதீகம்.x
ஐப்பசி மாதம் துலாம் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் காவிரி ஆற்றில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மக்கள் தங்கள் செய்த பாவங்களை போக்குவதற்காக கங்கையில் சென்று நீராடி புனிதம் பெறுவர். ஆனால் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 புண்ணிய நதிகளும், 3½ கோடி தேவர்களும் காவிரியில் மூழ்கி தங்களுடைய பாவத்தை போக்கி கொள்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

துலாம் மாதம் முழுவதும் காவிரியில் நீராடினால், 7 ஜென்மங்களில் செய்த பாவம், முன்னோர்களின் சாபம் நீங்குவதாக நம்பிக்கை.

துலாம் மாதம் முழுவதும் நீராட முடியாவிட்டாலும், முதல்நாள் மற்றும் கடைசி நாள் நீராடினாலே புண்ணியப்பேறு அடைவார்கள் என்பது ஐதீகம். இந்த நிலையில் துலாம் (ஐப்பசி) மாதத்தின் கடைசி நாளான நேற்று தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள காவிரி ஆற்றில் ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி ஐயாறப்பர் கோவிலில் இருந்து சூலபாணி காவிரி ஆற்றங்கரையில் உள்ள புஷ்யமண்டப படித்துறைக்கு எடுத்து வரப்பட்டு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து ஏராளமானோர் ஆற்றில் புனித நீராடினர். சிலர் தர்ப்பணம் கொடுத்தனர்.

வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி ஐயாறப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக காவிரி புஷ்யமண்டப படித்துறை மற்றும் கோவிலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஆற்றங்கரை மற்றும் கோவில் பகுதிகளில் திருவையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News