செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா பரவலை தடுக்க 67 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

Published On 2021-05-14 15:15 GMT   |   Update On 2021-05-14 15:15 GMT
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 67 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தினசரி 300-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க மாவட்டம் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரே தெருவில் 3-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்தபகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு பிளீச்சிங் பவுடர் தூவுதல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சில பகுதிகள் தகரம் கொண்டும் அடைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் 67 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுமார் 2 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோயாளிகளில் பாதிப்பு குறைவாக உள்ள 40 வயதுக்கு குறைவான 368 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுதவிர கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 7,137 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் முன்கள பணியாளர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று வரை 842 அரசு அலுவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News