செய்திகள்
கோப்பு படம்.

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி டிரைவர் பலி

Published On 2020-10-19 14:40 GMT   |   Update On 2020-10-19 14:40 GMT
தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
தாராபுரம்:

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஜமால் புதூரை சேர்ந்தவர் முத்து பாவா மகன் சல்மான் பார்சி (வயது 24) கார் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் சல்மான் பார்சி தனது நண்பர்களுடன் அலங்கியம் சாலையில் சித்தக்காடு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுக்கு குளிக்க சென்றார்.

அங்கு நண்பர்களுடன் உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென்று சல்மான் பார்சி நீரில் மூழ்கினார்.

இதனை பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நண்பர்கள் அனைவரும் ஆற்றுக்குள் சல்மான் பார்சியை தேடினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சல்மான் பார்சியை தண்ணீரில் இருந்து மீட்டனர். பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த அவரை காரில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் சல்மான் பார்சி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் நண்பர்கள் கதறி அழுதனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் தாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். அந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News