செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விற்கப்படும் காட்சி.

ஒரு கிலோ மல்லி ரூ.3 ஆயிரம்- பூக்கள் விலை உயர்வு

Published On 2020-01-14 07:22 GMT   |   Update On 2020-01-14 07:22 GMT
கோயம்பேடு மார்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ மல்லி ரூ.3 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
போரூர்:

கோயம்பேடு மார்கெட்டில் பூ மார்க்கெட் பின்புறம் பொங்கல் சிறப்பு சந்தை மூலம் வியாபாரிகள் பொங்கல் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைத்தார், தோரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் இன்று கோயம்பேடு மார்கெட்டில் பொதுமக்கள் அதிகளவில் பொருட்களை வாங்க குவிந்து உள்ளனர்.

இதன் காரணமாக மார்கெட் வளாகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு உள்ளது. மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ மல்லி ரூ.3 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

பூக்கள் விலை உயர்வு காரணமாக பூ மார்க்கெட்டில் கூட்டம் குறைந்துள்ளது.

பூக்கள் விலை ஒரு கிலோவில் விவரம் வருமாறு:-

மல்லிப்பூ -ரூ.3ஆயிரம், சாமந்தி - ரூ.100, பன்னீர் ரோஸ் - ரூ.100, சாக்லேட் ரோஸ் - ரூ.150, சிகப்பு செண்டு - ரூ.20. கனகாம்பரம் - ரூ.700, ஜாதி- ரூ.1200, முல்லை - ரூ.1500, சம்பங்கி -ரூ.100.

பூக்கள் விலை உயர்வு குறித்து வியாபாரி ரவி கூறியதாவது:-

தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி, திருவள்ளூர் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து பூக்கள் கோயம்பேடு சந்தைக்கு தினசரி விற்பனைக்கு வருகிறது.

பனி சீசன் காரணமாக பூக்கள் வரத்து மூன்றில் ஒரு பங்காக குறைத்து உள்ளது. சாமந்தி தவிர மற்ற பூக்கள் வரத்து குறைவு. இதன் காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மல்லி பூ தற்போது கிலோ கணக்கில் மட்டுமே கோயம்பேடு சந்தைக்கு வருவதால் 2 நாட்களுக்கு முன்பு ரூ. 2ஆயிரம் வரை விற்ற மல்லி இன்று ரூ. 3ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

அடுத்த மாதம் முதல் வழக்கம் போல வரத்து அதிகரித்து விலை குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News