கோவில்பட்டியில் ஆலைகளில் பதுக்கிய 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள மாவு அரவை ஆலைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் ஆர்.டி.ஓ. சங்கரநாரயணன், தாசில்தார் அமுதா, கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், வட்டவழங்கல் அலுவலர் செல்வக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கடலைக்கார தெருவில் விஜய் என்பருக்கு சொந்தமான மாவு அரவை மில், சின்ன கருப்பசாமி கோவில் தெரு, கருவாட்டுப்பேட்டை தெருவில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான மாவு அரவை மில் ஆகியவற்றில் நடத்திய சோதனையில் ரேஷன் அரிசி, கோதுமை ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனையில் 242 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி மட்டுமின்றி, அரவை செய்யப்பட்ட மாவு மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகள் நடத்திய ஒரு நாள் சோதனையில் 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரேஷன் அரிசி பதுக்கி வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.