செய்திகள்
மரணம்

இலந்தைகூடத்தில் காவலாளி அடித்துக்கொலை?- போலீசார் விசாரணை

Published On 2020-05-23 13:11 GMT   |   Update On 2020-05-23 13:11 GMT
இலந்தைகூடத்தில் காவலாளி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் காந்திநகரை சேர்ந்தவர் பிரான்சிஸ்(வயது 41). இவர் இலந்தைகூடம் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்றும் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். நேற்று நெல் பிடிக்கும் பணி எதுவும் நடக்காததால் பிரான்சிஸ் மட்டும் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் அங்கு பணி புரியும் ஒருவர் நெல் கொள்முதல் நிலையத்திற்குள் சென்று பார்த்தார். அப்போது பிரான்சிஸ் மின் வயரில் தூக்கில் தொங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து உடனே வெங்கனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரான்சிஸ்சின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பிரான்சிஸ் உயிரிழந்ததை கேட்டு அங்கு வந்த அவரது குடும்பத்தினர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரான்சிஸ்கும், நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை பார்த்த சுமை தூக்குபவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. அவர்கள்தன் என் மகனை அடித்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர். எங்களுக்கு இந்த சாவில் மர்மம் உள்ளது. சுமைதூக்குபவர்களை கைது செய்து விசாரியுங்கள் என போலீசாரிடம் கூறி கதறி அழுதனர். இதுகுறித்து வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News