செய்திகள்
டெல்லி பேரணியில் ஏற்பட்ட வன்முறை ஏற்கத்தக்கது அல்ல - பஞ்சாப் முதல் மந்திரி
டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை ஏற்கத்தக்கது அல்ல என பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்:
டெல்லியில் டிராக்டர் பேரணி சென்ற விவசாயிகளில் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு தங்கள் கொடியையும் அதில் ஏற்றினர். இதனால் செங்கோட்டையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. மேலும் டெல்லியின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அங்கு இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை ஏற்கத்தக்கது அல்ல என பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளால் உருவாக்கப்படும் நல்லெண்ணத்தை இது மறுக்கும்.
அனைத்து உண்மையான விவசாயிகளும் டெல்லியை விட்டு வெளியேறி எல்லைகளுக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.