செய்திகள்
மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்

Published On 2021-05-05 05:24 GMT   |   Update On 2021-05-05 08:11 GMT
மம்தா பானர்ஜி 3-வது முறையாக இன்று மேற்கு வங்க முதல்-மந்திரி ஆகி இருக்கிறார். அடுத்தகட்டமாக அவர் அமைச்சரவையை அமைக்க உள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

கடந்த 2-ந் தேதி நடந்த ஓட்டு எண்ணிக்கையில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று மம்தா பானர்ஜி 3-வது முறையாக ஆட்சியை பிடித்தார்.

மம்தாவின் திரிணாமுல் காங்கிரசுக்கு அடுத்தபடியாக பாரதிய ஜனதா கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தநிலையில் மேற்கு வங்காளத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 தினங்களாக திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு சதி செய்து இத்தகைய வன்முறை தூண்டி விடப்பட்டிருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.

இந்தநிலையில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் ஏற்பாடுகள் நேற்று தொடங்கின. கடந்த திங்கட்கிழமை மம்தா பானர்ஜி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஏற்கனவே வகித்து வந்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்து அவர் கடிதம் கொடுத்திருந்தார்.



அதை ஏற்றுக்கொண்ட கவர்னர் ஜெகதீப் தங்கார் தற்காலிகமாக முதல்வர் பதவியை ஏற்கும்படி மம்தாவை கேட்டுக் கொண்டார். மேலும் ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். சிறப்பு அழைப்பாளர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியும் இடம் பெற்று இருந்தார்.

இதை ஏற்றுக்கொண்ட மம்தா பானர்ஜி இன்று காலை 10.45 மணிக்கு முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

மம்தா பானர்ஜி பதவி ஏற்கும் விழா கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையில் மிக எளிமையாக நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக குறைந்த அளவில் அழைப்பாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மம்தா பானர்ஜிக்கு கவர்னர் ஜெகதீப் தங்கார் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். அப்போது அவர் மேற்கு வங்காளத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு மம்தா பானர்ஜி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனால் பதவி ஏற்பு அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மம்தா பானர்ஜி 3-வது முறையாக இன்று மேற்கு வங்க முதல்-மந்திரி ஆகி இருக்கிறார். அடுத்தகட்டமாக அவர் அமைச்சரவையை அமைக்க உள்ளார்.

இதற்கிடையே மேற்கு வங்காள எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக தற்காலிக சபாநாயகராக பீமன் பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

மம்தா பானர்ஜி தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லை. அடுத்த 6 மாதத்துக்குள் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட வேண்டும். எனவே திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் யாராவது ஒருவர் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News