செய்திகள்
போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்த காட்சி

புதிய நிலச்சட்டங்களுக்கு ஜம்மு காஷ்மீரில் வலுக்கும் எதிர்ப்பு- பிடிபி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-29 09:18 GMT   |   Update On 2020-10-29 09:18 GMT
புதிய நிலச்சட்டங்களுக்கு எதிராகவும், என்ஐஏ சோதனைகளை கண்டித்தும் பிடிபி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஜம்மூ காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதற்காக ஜம்மு காஷ்மீருக்கான 26 மாநில சட்டங்களை ரத்து செய்தும், மாற்று சட்டத்தை அமல்படுத்தியும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து  இருக்கிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த புதிய அறிவிப்பை ஏற்க முடியாது என்றும் கூறினர். 

இந்நிலையில் புதிய சட்டத்திருத்தம் மற்றும் மாநிலத்தில் என்ஜிஓ மற்றும் அறக்கட்டளைகளில் நடைபெறும் என்ஐஏ சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிடிபி கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீநகர் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் அருகே நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி பிடிபி தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில், ‘ஜம்மு காஷ்மீரை சூறையாடுவதற்காக பாஜக அரசு நிறைவேற்றி உள்ள புதிய நில சட்டத்தை எதிர்த்து பிடிபி கட்சியினர் அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சிவில் சமூகமோ அரசியல்வாதிகளோ இங்கு எதுவும் பேச முடியாது. முழு ஜம்மு காஷ்மீரும் சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது’ என்றார்.
Tags:    

Similar News