செய்திகள்
கட்டிட தொழிலாளி கொலை: தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் கைது
சாமல்பட்டி அருகே கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொன்றதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே உள்ள முக்கரபள்ளியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 21). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஊர்மிளா. கடந்த 13-ந் தேதி திருப்பதியை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதுகுறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடினர்.
அப்போது கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அதேபகுதியை சேர்ந்த லாரி டிரைவர் துரைராஜ் கழுத்தை அறுத்து கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த துரைராஜை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்விவரம் வருமாறு:-
எனக்கு திருமணமாகி தமிழரசி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். எனக்கும் ஒரு பெண்ணுக்கும் 10 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. நாங்கள் 2 பேரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்து வந்தோம். இந்த நிலையில் எனது கள்ளக்காதலிக்கு திருப்பதியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்து நான் திருப்பதியை கண்டித்தேன். ஆனால் அவர் என்னை திட்டினார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த நான் கடந்த 13-ந்தேதி திருப்பதியை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறினார். கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.