செய்திகள்
முதியவருக்கு தடுப்பூசி போடப்படும் காட்சி.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 2லட்சத்து 73ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-06-11 08:52 GMT   |   Update On 2021-06-11 13:35 GMT
திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 750 பேர் கோவிஷீல்டும், 42 ஆயிரத்து 596 பேர் கோவேக்சினும் செலுத்தியுள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதியில் இருந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது இடங்களில் முகாம் என பல்வேறு பிரிவுகளாக தினமும் தடுப்பூசி போடும்பணி நடைபெறுகிறது.

இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக கடந்த 4 நாட்கள் திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதியில் இருந்து இதுவரை மொத்தமாக 2 லட்சத்து 73 ஆயிரத்து 346 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 2 லட்சத்து 29 ஆயிரத்து 11 பேருக்கும், 2-வது டோஸ் 44 ஆயிரத்து 335 பேருக்கும் போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டவர்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 585 பேர் ஆண்கள். 97 ஆயிரத்து 392 பேர் பெண்கள்.

2 லட்சத்து 30 ஆயிரத்து 750 பேர் கோவிஷீல்டும், 42 ஆயிரத்து 596 பேர் கோவேக்சினும் செலுத்தியுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 55 ஆயிரத்து 28 பேரும், 18 வயது முதல் 44 வயதுடையவர்கள் 90 ஆயிரத்து 980 பேரும், 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 82 ஆயிரத்து 950 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News