ஆன்மிகம்
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில்

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை தினத்தில் பக்தர்கள் தரிசனம் ரத்து

Published On 2020-09-15 08:44 GMT   |   Update On 2020-09-15 08:44 GMT
வருகிற 17-ந் தேதி மகாளய அமாவாசை தினத்தில் ஏராளமான பக்தர்கள் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வருவார்கள் என்பதால் அமாவாசை அன்று பக்தர்கள் தரிசனம் ரத்து செய்வதாக முடிவு செய்யப்பட்டது.
மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். விசேஷ நாட்கள் மற்றும் அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். தற்போது கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் வருகிற 17-ந் தேதி மகாளய அமாவாசை தினத்தில் வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வருவார்கள் என்பதால் இதுகுறித்த ஆலோசனை கூட்டம் மேட்டூர் உதவி கலெக்டர் சரவணன் தலைமையில் உதவி-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பக்தர்கள் வருகை மிக அதிகமாக இருக்கும் என்பதால் அவர்களிடம் சமூக இடைவெளியை ஏற்படுத்துவதும், கிருமிநாசினி, முக கவசம் போன்றவற்றை அவர்களை அணிய வலியுறுத்துவதும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதாக இருக்கும் என பல்வேறு துறை அதிகாரிகளும் தெரிவித்தனர். ஆகவே அமாவாசை அன்று பக்தர்கள் தரிசனம் இந்த கோவிலில் ரத்து செய்வதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மேட்டூர் தாசில்தார் சுமதி, இந்து அறநிலைத்துறை உதவி ஆணையாளர் உமாதேவி, மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி (பொறுப்பு) அழகு லிங்கேஸ்வரி, மேச்சேரி பேரூராட்சி நிர்வாக அதிகாரி ஜல்லேந்தரன் மற்றும் வருவாய் துறையினர், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News