குலசேகரன்பட்டினத்தில் தொழிலாளி கொலை வழக்கில் தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மகன் பெருமாள்(வயது 30). கூலி தொழிலாளி.
நேற்று காலை பெருமாள் தலையில் பலத்த காயங்களுடன் வீட்டில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு சென்றார்.
பெருமாளை நள்ளிரவில் வீடு புகுந்து மர்மநபர்கள் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெருமாளுக்கும், அவரது உறவினர்களான 2 பெண்களுக்கும் இடையே கடந்த மே மாதம் தகராறு ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட தகராறில் அவர்களை பெருமாள் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த முன் விரோதத்தில் பெருமாள் வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அதே தெருவை சேர்ந்த சுடலைமுத்து(46), அவரது மகன் மாதேஷ்(19), செந்தில்நாதன்(30) ஆகியோர் தான் பெருமாளை கொலை செய்தனர் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், சுடலை முத்துவின் மனைவி மற்றும் சகோதரி ஆகியோருக்கும், பெருமாளுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும், அது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக கைது செய்யப்பட்ட 3 பேரும் பெருமாளை கொலை செய்ததும் தெரியவந்தது.