செய்திகள்
சேலம் அருகே புதுப்பெண்ணை கொன்று கணவர் தற்கொலை
சேலம் அருகே திருமணம் ஆன 43 நாட்களில் புதுப்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் அருகே வீராணம் கோராத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 33). இவர், வீடுகளுக்கு செட்டாப் பாக்ஸ் மற்றும் ஆண்டனா உள்ளிட்டவை பொருத்தும் பணியை செய்து வந்தார். மேலும், வீட்டின் முன்பு உள்ள நிலத்தில் விவசாயமும் செய்து வந்துள்ளார்.
கடந்த 43 நாட்களுக்கு முன்பு கன்னங்குறிச்சியை சேர்ந்த மோனிஷா (19) என்பவரை தங்கராஜ் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று காலை கணவன்-மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரம் அடைந்த தங்கராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மோனிஷாவின் கழுத்தை பிடித்து சரமாரியாக அறுத்துள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப்பார்த்ததும் போலீசார் தன்னை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள் என்று பயந்த தங்கராஜ் வீட்டை பூட்டிக்கொண்டு அங்கு இருந்த கேபிள் வயரை எடுத்து கழுத்தில் மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை 9 மணி ஆன பிறகும் தங்கராஜ் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது புதுப்பெண் மோனிஷா கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில் தங்கராஜ் தூக்கில் பிணமாக தொங்கியதும் தெரியவந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்து உதவி கமிஷனர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொன்றுவிட்டு தங்கராஜ் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அருகே திருமணம் ஆன 43 நாட்களில் புதுப்பெண்ணை கொன்றுவிட்டு, அவரது கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.