உள்ளூர் செய்திகள்
அரசு போக்குவரத்து பணியாளர்கள் திடீர் போராட்டம்
காயமடைந்த டிரைவர்-கண்டக்டர் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
காங்கேயம்;
திருப்பூரில் இருந்து நேற்றிரவு காங்கேயத்திற்கு அரசு டவுன் பஸ் சென்றது. காங்கேயம் வாய்க்கால்மேடு பகுதியில் செல்லும் போது பஸ்சை முந்தி சென்ற கார் திடீரென பஸ்சின் குறுக்கே நின்றது. அதில் இருந்து இறங்கிய 2 பேர் திடீரென டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த 2 பேரும் டிரைவர் சுப்பிரமணியன் (வயது 52), கண்டக்டர் ஆல்பர்ட்(40) ஆகியோரை சரமாரி தாக்கினர். இதில் ஆல்பர்ட் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து மர்மநபர்கள் காரில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். காயமடைந்த டிரைவர்-கண்டக்டர் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கேயம் போக்குவரத்து பணியாளர்கள் 50 பேர் காங்கயம் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் செய்தனர்.
மர்மநபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி தர்ணாவிலும் ஈடுபட்டனர். போலீசார் விரைவில் கைது செய்வதாக கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு பதிவு செய்த போலீசார் டிரைவர்-கண்டக்டரை தாக்கிய மர்மநபர்கள் யார்? எதற்காக தாக்கினார்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.