செய்திகள்
விபத்து

எடப்பாடி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பலி

Published On 2021-04-08 10:48 GMT   |   Update On 2021-04-08 10:48 GMT
எடப்பாடி அருகே வாக்களித்து விட்டு திரும்பியபோது மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை இறந்தார்.
எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளர் நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் சிவகாசி (வயது 32). இவர் சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராக பணி புரிந்து வந்தார்.

இவருக்கும், சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த செல்வம் மகள் மீனா என்பவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் வாக்களிப்பதற்காக சிவகாசி தனது மனைவியுடன் புறப்பட்டார். மனைவியை அவரது தந்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, எடப்பாடிக்கு வந்தார்.

பின்னர் எடப்பாடியில் வாக்களித்துவிட்டு அவரது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வெள்ளர்நாயக்கன்பாளையம் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள ஒரு வளைவில் சென்றபோது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு, சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்களின் உட்ரோ வில்சன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News