ஆன்மிகம்
கேடிக வாகனங்களில் சாமி வீதி உலா

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சிவராத்திரி விழா: கேடிக வாகனங்களில் சாமி வீதி உலா

Published On 2021-03-17 03:05 GMT   |   Update On 2021-03-17 03:05 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடைபெற்றுவரும் சிவராத்திரி விழாவின் 11-வது நாளில் கேடிக வாகனங்களில் சாமி, அம்பாள் வீதி உலா நடந்தது.
ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 11-வது நாளான நேற்று காலை கேடிக வாகனங்களில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதைத் தொடர்ந்து ஜெல விநாயகர் கோவில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் வசந்த உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மகாசிவராத்திரி நிறைவு விழாவாக கருதும் கொடி இறக்குதல் நிகழ்ச்சி கோவிலில் நடை பெறுவதையொட்டி வசந்த மண்டபத்தில் தீர்த்தவாரி வசந்த உற்சவம் நடந்தது.

இதற்காக வசந்த மண்டபத்தில் சுவாமி, அம்பாள் உற்சவ மூர்த்திகளை வைத்து சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜூ தம்பதியினர் உள்பட ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. மதுசூதன் ரெட்டி மற்றும் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் தீர்த்தவாரி நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் கோவில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு கலச பூஜை செய்து, கலசத்தில் உள்ள புனித நீரால் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து பால், பன்னீர், தயிர், சந்தனம், மஞ்சள் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்த பின்னர் திரிசூலம் ஸ்நானம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நெய் வேத்தியங்கள் சமர்ப்பித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News