உள்ளூர் செய்திகள்
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மாதாந்திர மாத்திரைகள் வாங்கும் நோயாளிக்கு மஞ்சள் பை வழங்கும் விழா
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மாதாந்திர மாத்திரைகள் வாங்கும் நோயாளிக்கு மஞ்சள் பை வழங்கும் விழா நடைபெற்றது.
செங்கோட்டை:
செங்கோட்டை மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற சுகாதார திட்டத்தின் கீழ் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் நகர்மன்ற உறுப்பினர் பொன்னுலிங்கம் சார்பாக தொற்றா நோய்களுக்கு மாதாந்திர மருந்துகள் வாங்கும் நபர்களுக்கு இலவசமாக துணிப்பை (மஞ்சள் பை) வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் மருத்துவர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.நகர்மன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
மூத்த ஆய்வக நுட்பனர் ஹரிஹர நாராயணன் வரவேற்று பேசினார். செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 1,500-க்கும் மேற்பட்ட பயனாளிகள் சர்க்கரை நோய், இருதய நோய்ரத்த அழுத்தம், தைராய்டு மற்றும் மூளை நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு மாதாந்திர மாத்திரைகள் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.
அவர்களுக்கு உதவும் வகையிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் விதமாகவும் துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் விதமாகவும் ராமகிருஷ்ணன் பயனாளிகளுக்கு மஞ்சள் பையுடன் மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மருந்தாளுநர் அப்பாஸ் மீரான் நன்றி கூறினார்.