செய்திகள்
அதிநவீன போர்க்கப்பல்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

Published On 2021-11-22 03:25 GMT   |   Update On 2021-11-22 03:26 GMT
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
மும்பை:

மத்திய பாதுகாப்புத்துறையின் 15 ‘பி’ திட்டத்தின் கீழ் 4 அதிநவீன போர்க்கப்பல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. இதில், முதல் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் மும்பை கட்டுமான தளத்தில் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

நவீன கருவிகள், வசதிகள் உள்ள இந்த போர்க்கப்பலை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று மும்பை, கடற்படை நேவல் டாக்யார்டில் நடந்த விழாவில் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து உள்ள நிலையில் கடற்படைக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரத்து 400 டன் எடையுள்ள இந்த போர்க்கப்பல் எதிரிகளின் ரேடார்களில் சிக்காமல், எதிரிகளின் ஏவுகணைகள், கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

இதேபோல அணு ஆயுதங்கள், உயிரியல் மற்றும் வேதியியல் தாக்குதலுக்கு எதிராக போரிடும் சாதனங்களும் ஐ.என்.எஸ். விசாகப்பட்டினத்தில் இடம்பெற்று உள்ளது.

விழாவில் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் பேசியதாவது:-



சில பொறுப்பற்ற நாடுகள் (சீனா) தங்களது குறுகிய நலனுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட விதிகளுக்கு புதிய, தவறான வரையறைகளை ஆணவ போக்குடன் கூறுகின்றன. சில நாடுகளின் தன்னிச்சையான இந்த வரையறையால் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் மீண்டும், மீண்டும் பலவீனமாக்குவது கவலைக்குரிய விஷயமாகும்.

சுதந்திரமான கடல்சார் கப்பல் போக்குவரத்து, தடையற்ற வணிகம் ஆகியவற்றில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. ஒருமித்து எடுக்கப்படும் கொள்கைகள், திறந்த, அமைதியான நிலையான கடல் ஒழுங்கிற்கு இந்தியா ஆதரவளிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News