ஆன்மிகம்
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில்

கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் மட்டுமே பரிகாரம் செய்ய அனுமதி

Published On 2021-02-10 08:44 GMT   |   Update On 2021-02-10 08:44 GMT
தை அமாவாசையையொட்டி, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் மட்டுமே பரிகாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. மேலும் இந்த கோவிலில் மும்மூர்த்திகள் குடிகொண்டு உள்ளனர். எனவே இந்த கோவிலில் விேசஷ நாட்கள், அமாவாசை நாட்கள் மற்றும் முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

அதுமட்டுமின்றி முக்கிய பரிகார தலமாக கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் உள்ளது. இதனால் தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து பரிகாரம் செய்து மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்து செல்வார்கள்.

குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் திரளான பக்தர்கள் கொடுமுடி வந்து காவிரி ஆற்றில் புனித நீராடி திதி, தர்ப்பணம் கொடுக்கவும் மற்றும் பரிகாரம் செய்யவும் வருவது வழக்கம். இதனால் இந்த நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்து காணப்படும்.

இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) தை அமாவாசை நாள் வருகிறது. எனவே திதி, தர்ப்பணம் கொடுக்கவும் மற்றும் பரிகாரம் செய்யவும் அதிக அளவில் பக்தர்கள் கொடுமுடிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி கொடுமுடி கோவில் செயல் அலுவலர் பா.ரமேஷ், கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளனர். அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கொரோனா தொற்றின் காரணமாக குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் கோவிலுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை. கொடுமுடி கோவிலுக்கு எதிரே உள்ள படித்துறைகளில் மட்டுமே பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

பரிகாரம் செய்யும் பக்தர்கள் கண்டிப்பாக கோவிலில் அனுமதி சீட்டு பெற்ற பிறகே பரிகாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல் மணல்மேடு பகுதிக்கு பக்தர்கள் யாரும் சென்று தர்ப்பணம் கொடுக்கவோ, பரிகாரங்கள் செய்யவோ மற்றும் குளிக்கவோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் சமீபகாலமாக மணல்மேடு பகுதியில் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. ஆகவே அங்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News