மீஞ்சூர் அருகே வாலிபர் வெட்டி கொலை
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அனுப்பம்பட்டு சின்ன காலனியை சேர்ந்தவர் கவி அமுதன் (28). இவர் அத்திப்பட்டில் உள்ள ஆயில் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இன்று காலை 9.45மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். நாலூர் ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்த போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து நிறுத்தியது.
பின்னர் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. அதில் அவரது தலை, கை, கால்கள் மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பொன்னேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
கும்பலால் வெட்டி கொல்லப்பட்ட கவிஅமுதன் கொலை குற்றவாளி. கடந்த டிசம்பரில் விஜி (22) என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். அதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.
தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விஜியின் கொலைக்கு பழிக்குப் பழி தீர்க்க அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.