செய்திகள்
கொரோனா வைரஸ்

திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 746 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-05-11 10:42 GMT   |   Update On 2021-05-11 13:21 GMT
திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியாகினர்.
திருப்பூர்:

திருப்பூரில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே நாள் ஒன்றின் பாதிப்பு 500-ஐ கடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த கொரோனா பாதிப்பின் போது கூட இந்த அளவிற்கு பாதிப்பு இல்லை. ஆனால் தற்போது கொரோனா 2-வது அலையில் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 931-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 316 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 22-ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 654 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியாகினர்.

அதாவது திருப்பூரை சேர்ந்த 51 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானார். இதுபோல் 73 வயது ஆண் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 255-ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் 92, கொரோனா படுக்கைகள் 119, ஐ.சி.யு. படுக்கைகள் 5 என மொத்தம் 216 படுக்கைகள் உள்ளது என சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News