செய்திகள்
கிரிப்டோகரன்சி மசோதா உள்ளிட்ட 26 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி உள்ளிட்ட 26 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த குளிர்கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறும் வகையில் புதிய சட்ட மசோதாவை கொண்டு வர வாய்ப்புள்ளது. அத்துடன் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதா உள்பட 26 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி மற்றும் ஒழுங்குமுறை மசோதா அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கவும், தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடைவிதிக்கவும் வழிவகை செய்யும். அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சிக்கான கட்டமைப்பை உருவாக்க ஆர்பி.சி. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி கிரிப்டோகரன்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது இளைஞர்கள் அதிகப்படியான வாக்குறுதி மற்றும் வெளிப்படை தன்மையில்லாத விளம்பரம் ஆகியவற்றால் தவறாக வழிநடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பது ஆலோசனையில் முக்கியமானதாக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஆலோசனை கூட்டத்தில் பண மோசடி மற்றும் பயங்கரவாத செயலுக்கு பண உதவி செய்வதற்கும் ஒழுங்குமுறைப்படுத்தாக கரன்சி மார்க்கெட்டை அனுமதித்துவிடக்கூடாது என்றும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி கிரிப்டோகரன்சி குறித்து ஆர்.பி.ஐ., உள்துறை அமைச்சகம், நிதியமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.