லைஃப்ஸ்டைல்
காது குடைவதால் இந்த பிரச்சனைகள் வரலாம்

காது குடைவதால் இந்த பிரச்சனைகள் வரலாம்

Published On 2021-08-31 04:21 GMT   |   Update On 2021-08-31 07:41 GMT
காது அடைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊக்கு, `ஹேர் பின்’, தீக்குச்சி, பேனா, பென்சில், பட்ஸ் என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் சொருகிக் குடையும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது.
தலைக்கு குளிக்கும் போதெல்லாம் காது அடைத்துக் கொள்கிறது. அப்போது காது சரியாகக் கேட்பதில்லை.

`பட்ஸ்’ கொண்டு காதை சுத்தப்படுத்திய பிறகுதான் பிரச்சினை சரியாகிறது என சிலர் சொல்வதை கேட்டு இருப்போம்.

காது அரிப்பு, காதில் அழுக்கு சேருவது, குரும்பி சேர்வது, சீழ் பிடிப்பது, காது அடைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊக்கு, `ஹேர் பின்’, தீக்குச்சி, பேனா, பென்சில், பட்ஸ் என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் சொருகிக் குடையும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. காரணம், காது குடைவதில் கிடைக்கும் சுகம். இதற்கு அடிமையானவர்களுக்கு இது ஒரு பழக்கமாகவே ஆகிவிடுகிறது. ஆனால், இது ஆபத்தானது.

பட்ஸ் வைத்து காது குடைவதால், காதில் தொற்று ஏற்படவே வழி வகுக்கும். இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனை காது இழந்துவிடும். அப்போது மீண்டும் மீண்டும் அழுக்கு சேருவதைத் தடுக்க முடியாது. பல நேரங்களில் அழுக்கை வெளியில் எடுப்பதற்குப் பதிலாகக் காதின் உட்புறம் உள்ள செவிப்பறைக்கு தள்ளிவிடுவதுதான் நடக்கும். அப்போது செவிப்பறை பாதிக்கப்படும். `பட்ஸ்’ பட்டு செவிப்பறை கிழித்துவிட்டால், காது வலி, காது இரைச்சல், காது கேட்காமல் போவது போன்ற ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனால் முடிந்தவரை பட்ஸ் கொண்டு காது குடைவதை தவிர்ப்பதே நல்லது.

காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். இதற்கு இயற்கை நமக்கு தந்துள்ள பாதுகாப்பு வளையம்தான், காதுக் குரும்பி. காதுக்குள் ‘செருமினஸ் சுரப்பிகள்’ உள்ளன. இவைதான் காதுக்குள் குரும்பியை சுரந்து, செவிப்பறையை பாதுகாக்கின்றன. குறிப்பாக, காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள், அந்நியப் பொருட்கள் போன்றவை செவிப்பறையை பாதிக்காதபடி தடுப்பது, இந்த குரும்பிதான். இதை அகற்ற வேண்டிய அவசியமில்லை. தானாகவே மெல்ல மெல்ல ஊர்ந்து வெளியில் வந்துவிடும்.

அப்படி அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், இதற்கென உள்ள காது சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெயை காதில் சில சொட்டுகள் விட்டால், அதில் ஊறி, தானாகவே வெளியில் வந்துவிடும். என்றாலும், நாட்பட்ட குரும்பி இந்த வழியில் வராது. சிரிஞ்ச் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்ற வேண்டும். இதற்கு மருத்துவர் உதவி தேவை.

காதுக்குள் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், தலையைச் சாய்த்துப் பொருளைக் கீழே விழ வைக்கலாம். அல்லது மருத்துவரிடம் காண்பித்து அதற்கென உரிய கருவியால் வெளியில் எடுப்பதே நல்லது. காதில் எறும்பு போன்ற பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சில சொட்டுகள் விட்டால், பூச்சி இறந்துவிடும். பிறகு, சில சொட்டுகள் தண்ணீர் விட்டு, தலையை சாய்த்தால் பூச்சி வெளியில் வந்துவிடும். எந்தக் காரணத்தைக் கொண்டும் காய்ச்சிய எண்ணெயை காதுக்குள் ஊற்றக் கூடாது, அப்படிச் செய்தால் காது பாதிக்கப்படும் என்கிறார்கள், மருத்துவர்கள்.
Tags:    

Similar News