செய்திகள்
டி.ஜி.பி. திரிபாதி

பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்- டி.ஜி.பி.க்கு உத்தரவிட்ட முதலமைச்சர்

Published On 2021-06-13 07:55 GMT   |   Update On 2021-06-13 07:55 GMT
முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது அவர்கள் செல்லும் வழிப்பாதையில் பாதுகாப்பு பணிக்காக நீண்ட நேரம் பெண் போலீசார் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

போலீசாரின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். போலீசாருக்கு சிறப்பு நிவாரண நிதி, வேலை நேரம் இரண்டு ஷிப்டுகளாக பிரிப்பு உள்ளிட்டவை முதல்- அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள் ஆகும்.

இதனை டி.ஜி.பி. திரிபாதி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் போலீசார் பணியின் போது பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது அவர்கள் செல்லும் வழிப்பாதையில் பாதுகாப்பு பணிக்காக நீண்ட நேரம் பெண் போலீசார் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

அதுபோன்ற நேரங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் பெண் போலீசார் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்   கருணை காட்டி இருக்கிறார்.

‘‘எனது சுற்றுப்பயணத்தின் போது சாலையோரம் பாதுகாப்பு பணிகளில் பெண் போலீசார் இருப்பதை பார்த்துள்ளேன். இனி வரும் காலங்களில் அதுபோன்று பெண் போலீசாரை நீண்ட நேரத்திற்கு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்.


இதுதொடர்பான உத்தரவை அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தெரிவிக்க வேண்டும்’’ என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி.திரிபாதியிடம் அறிவுறுத்தினார்.

இதையடுத்து டி.ஜி.பி. திரிபாதி இதுதொடர்பாக வாய்மொழி உத்தரவை உடனடியாக பிறப்பித்துள்ளார். அதில் முதல்-அமைச்சரின் சுற்றுப்பயணத்தில் அவர் செல்லும் வழிகளில் பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான எழுத்துப்பூர்வ உத்தரவு விரைவில் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமி‌ஷனர்கள், மண்டல ஐ.ஜி.க்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News