செய்திகள்
கோப்புபடம்

மகள்களுக்கு விஷம் கொடுத்து, இளம்பெண் தற்கொலை முயற்சி - 2 வயது குழந்தை பலி

Published On 2020-10-18 13:42 GMT   |   Update On 2020-10-18 13:42 GMT
கிருஷ்ணகிரி அருகே வேலைக்கு செல்ல கணவன் அனுமதிக்காததால் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். இதில் 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள துவாரகபுரி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி சரண்யா(வயது 23). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சரிகா(5), ஜான்விகா (2) என 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு நகை கடையில், சரண்யா வேலைக்கு சென்று வந்துள்ளார். இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததால் வேலைக்கு செல்லாமல் அவர் வீட்டிலேயே இருந்து வந்தார். குழந்தைக்கு 2 வயது ஆனதால் தற்போது சரண்யா மீண்டும் வேலைக்கு செல்ல தனது கணவரிடம் அனுமதி கேட்டார். ஆனால் வேலைக்கு செல்ல சக்திவேல் அனுமதிக்கவில்லை.

இதனால் மனமுடைந்த சரண்யா கடந்த 13-ந்தேதி தனது 2 குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, தானும் அதை குடித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அக்கா கலைவாணி மற்றும் உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சரண்யா வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர்கள் 3 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர்.

இதையடுத்து அவர்கள், 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 வயது குழந்தை ஜான்விகா பரிதாபமாக இறந்தது. தொடர்ந்து சரண்யா மற்றும் மற்றொரு குழந்தை சரிகா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சரண்யாவின் தாயார் கிருஷ்ணகிரி அணை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Tags:    

Similar News