செய்திகள்
மயிலாடுதுறையில் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது எடுத்த படம்.

விவசாயிகளுக்கு வங்கிகளில் நகை கடன் நிறுத்தப்படுவதாக கூறுவது தவறான தகவல் -எச்.ராஜா

Published On 2019-09-11 09:01 GMT   |   Update On 2019-09-11 09:25 GMT
விவசாயிகளுக்கு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்படுவதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறைக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வந்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கேந்திரிய வித்யாலயாவில் 6-ம் வகுப்பு வினாத்தாளில் ஜாதிப்பிரச்சினை குறித்து இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவலை பரப்பி வருகிறார். இணைய தளம் வாயிலாக தி.மு.க.வினரை கொண்டு இதுபோல் தகவல்களை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது. அவர் கூறுவது போல் எந்த கேள்வியும் அதில் இல்லை.

இந்தியாவில் பொருளாதார பாதிப்பு என்பது நேருவின் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து கருப்பு பணம் உள்பட வெளியில் இருந்த பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து விட்டது. அதைக் கொண்டு தான் சாலைகள் மேம்பாடு, வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது எந்த பொருளாதார பாதிப்பும் இந்தியாவில் ஏற்படவில்லை. பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி தான் இந்தியாவை பிரதமர் மோடி கொண்டு செல்கிறார். எதிர்க்கட்சியினர் இதை தவறான நோக்கத்துடன் விமர்சிப்பதோடு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி விரைவில் அறிவிக்க உள்ளார். இதனால் விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். மேலும் விவசாயிகளின் வங்கி நகைக் கடன்கள் வழங்குவது ரத்து செய்யப்படும் என்று ஒரு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

சாலை விதிகளை மதிப்பது, ஹெல்மெட் அணிந்து செல்வது போன்ற சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து இந்தியாவை கட்டுப்பாட்டுடன் கூடிய நாடாக பிரதமர் மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் எதிர்தரப்பினர் அனைத்து திட்டங்களையும் விமர்சித்து மக்களை குழப்பி திசை திருப்ப முயல்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் ப.சிதம்பரம். கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார் போன்றவர்கள் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக உள்ளனர். இவர்கள் ஊழல் செய்தே சொத்துக்களை சேர்த்து உள்ளனர். அதனாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழல் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இதேபோல் தமிழகத்தில் கல்லூரி நடத்தி வரும் ஒருவர் ரூ.42 கோடி அளவில் ஊழல் செய்துள்ளதாக தெரியவருகிறது. விரைவில் அவரும் கைது செய்யப்படுவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News