செய்திகள்
பிரதமர் மோடி

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு - பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்

Published On 2020-11-22 17:57 GMT   |   Update On 2020-11-22 17:57 GMT
டெல்லியில் கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
புதுடெல்லி:

தலைநகர் புதுடெல்லியில் உள்ள டாக்டர் பி.டி. மார்க் என்னும் இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான 76  அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 8 பங்களாக்கள் புதுப்பிக்கப்பட்டு இந்த அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டப்பட்டுள்ளன.

இந்த குடியிருப்பு கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியைவிட 14 சதவீதம் குறைவாகவே செலவாகியுள்ளது. 

சாம்பல் மற்றும் கட்டுமானக் கழிவுகளிலிருந்து செய்யப்பட்ட செங்கற்கள், வெப்பத்தில் இருந்து காக்கும் மற்றும் எரிசக்தியை சேமிக்கும் சிறப்பு ஜன்னல்கள், எல்இடி விளக்குகள், குறைந்த எரிசக்தியில் இயங்கும் குளிர்சாதனப் பெட்டிகள், தண்ணீரை சேமிப்பதற்கான வசதிகள், மழைநீர் சேகரிப்பு மற்றும் கூரையில் சூரியஒளி சக்தி கருவி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை நாளை (23-ம் தேதி) காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News